Publish Date: Wed, 26 Jun 2019 (09:10 IST)
Updated Date: Wed, 26 Jun 2019 (09:13 IST)
தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் அமமுக வில் இருந்து விலகியுள்ள தங்கத் தமிழ்ச்செல்வன் வேறு எந்தக் கட்சியிலும் இணையவில்லை எனக் கூறியுள்ளார்.
தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் நேற்று முன் தினம் வெளியான ஆடியோ மூலம் வெட்ட வெளிச்சமாகி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என தினகரன் நேற்று அறிவித்தார். தேனி தொகுதியில் அமமுக அடைந்த தோல்விக்கானக் காரணம் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் தனியாக கூட்டம் போட்டதுதான் இருவருக்கும் இடையிலான விரிசலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்காகத்தான் தினகரனுடன் முரண்பட்டுள்ளார் என்றும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக அமைச்சர்கள்தான் அவரை இயக்கி வருகிறார்கள் என்றும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து தங்கத் தமிழ்ச்செல்வனிடம் கேள்வி எழுப்பியபோது ’நான் இதுவரையில் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. மன நிறைவோடு இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.