Publish Date: Tue, 25 Jun 2019 (08:54 IST)
Updated Date: Tue, 25 Jun 2019 (08:56 IST)
டிடிவி தினகரன் குறித்து நான் விமர்சனம் செய்தது உண்மைதான். முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கி கொள்ளுங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசமாக கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை கைப்பற்றுவார், இரட்டை இலையை கைப்பற்றுவார் என டிடிவி தினகரன் மீது நம்பிக்கை வைத்து அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கு பதவியும் போய், பணமும் நஷ்டமாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தினகரன் இருப்பதால் அவரது கூடாரமே கிட்டத்தட்ட காலியாகிவிட்டது
இந்த நிலையில் நேற்று அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆவேசமான ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ குறித்து விளக்கம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், 'கட்சியின் நிர்வாகம் பிடிக்காததால், கட்சியில் ஒருசில நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததால் நான் தலைமையை விமர்சனம் செய்து பேசினேன். நான் பேசியது உண்மைதான். நான் பேசியது தவறு என்றால் என்னை கட்சியில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் அதைவிடுத்து என்னை பற்றி இல்லாததும், பொல்லாததையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமமுக பிரமுகர் புகழேந்தி, 'ஆடியோவில் பேசியதற்கு தங்கதமிழ்ச்செல்வன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமின்றி வருத்தம் தெரிவிக்காமல் கட்சியை விட்டு நீக்குங்கள் என தங்கதமிழ்ச்செல்வன் சொல்வதைபார்த்தால் திட்டமிட்டு பேசுவதுபோல் தெரிகிறது' என்று கூறியுள்ளார்.