Publish Date: Tue, 08 May 2018 (07:36 IST)
Updated Date: Tue, 08 May 2018 (07:38 IST)
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் எதிர்பாராமல் சிக்கிய சென்னை இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். மரணம் அடைந்த சென்னை வாலிபரின் மறைவிற்கு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி அந்த இளைஞரின் பெற்றோருக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த திருமணி என்ற இளைஞர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். அப்போது பர்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில், இந்தவழியாகக் காரில் சென்றுகொண்டிருந்த திருமணி மீது பெரிய கல் ஒன்று பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த திருமணி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்ரி சில நிமிடங்களில் மரணம் அடைந்தார்.
இந்த தகவல் கேட்டு உடனடியாக திருமணியின் பெற்றோர் காஷ்மீர் சென்றனர். தமிழக இளைஞர் மரணச்செய்தி அறிந்த காஷ்மீர் முதல்வர் உடனடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து, திருமணியின் பெற்றோரிடம் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வீச்சு சம்பவம் நடந்த பகுதி இவரது தொகுதியில் அடங்கிய ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.