Publish Date: Wed, 20 May 2020 (10:53 IST)
Updated Date: Wed, 20 May 2020 (10:55 IST)
தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க தொடர்ந்து பலர் கோரிக்கை வைத்த நிலையில், சில நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிந்து தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 உடன் முடியும் நிலையில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் முக்கியமான பெரிய கோவில்களை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசங்கள் அணிவதும் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.