Publish Date: Wed, 07 Feb 2018 (12:39 IST)
Updated Date: Wed, 07 Feb 2018 (12:43 IST)
பிரதமர் மோடி பக்கோடா விற்பதை வேலைவாய்ப்பாக குறிப்பிட்டு பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எம்பியான பின்னர் பாஜக தலைவர் அமித்ஷா தனது கன்னிப்பேச்சில் மோடியின் பக்கோடா கருத்தை வரவேற்று பேசினார். இதனையடுத்து மேலும் மோடியின் பகோடா வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்கு விமர்சனங்கள் வலுக்கின்றனர்.
இதனையடுத்து சென்னை விரும்பாக்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை பக்கோடா விற்பது ஒன்றும் கேவலமான தொழில் இல்லை என்றார்.
சகோதரர்கள் பக்கோடா விற்று கொண்டு இருக்கிறார்கள். இது என்ன கேவலமான தொழிலா? பிச்சை எடுக்காமல் நமக்கு வருமானம் வைத்துக்கொண்டு, பக்கோடா விற்று தன் ஏழைத் தாய்க்கு தான் பக்கோடா விற்ற பணத்தில் உணவு வாங்கி கொடுக்கிறானே அந்த இளைஞன் கேவலமானவனா? என்று நான் கேட்கிறேன்.
பிச்சை எடுப்பது தான் கேவலம். ஆனால் பக்கோடா விற்பதை ஒரு தொழிலாக நீங்கள் கருதுகிறீர்களா என்று ப.சிதம்பரம் கேட்கிறார் என ஆவேசமாக சாடினார் தமிழிசை.