Publish Date: Wed, 24 Jul 2019 (09:20 IST)
Updated Date: Wed, 24 Jul 2019 (09:21 IST)
தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த மும்முரம் காட்டாத ஹெச் ராஜாவை தமிழிசை கடிந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையைத் துரிதப்படுத்த மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் ஆகும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பலரும் தமிழக பாஜகவில் உறுப்பினர் ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளோ அதற்கு நேர் எதிராக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் செயல் தலைவர் ஜேபி நாட்டா இதுபற்றி தமிழக தலைவர் தமிழிசையிடம் விரிவான அறிக்கைக் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் 51 நிர்வாக மாவட்டங்களிலும் தலா இரண்டு லட்சம் உறுப்பினர்கள் என தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே நட்டாவின் கட்டளை. இதற்காக முக்கியப் புள்ளிகள் அனைவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு தீவிரமாக களத்தில் இறங்கி வேலை செய்ய உத்தரவிடப்பட்டது. ஹெச் ராஜாவுக்கு தென் சென்னையில் ஒருப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதில் ஆர்வம் காட்டாமல் அவரது ஆட்களை அனுப்பி வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் தமிழிசைக்கு செல்ல அவர் ஹெச் ராஜாவை அழைத்து நேரடியாக களத்திற்கு சென்று செயல்பட வேண்டும். இல்லையென்றால் மேலிடத்துக்கு தகவல் அனுப்பப்படும் என சொன்ன பிறகே ஹெச் ராஜா தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறாராம்.