Publish Date: Mon, 13 Aug 2018 (18:31 IST)
Updated Date: Mon, 13 Aug 2018 (18:34 IST)
திமுகவில் அழகிரியால் ஏற்பட்ட அதிர்வலைகள் பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், ஸ்டாலின் தலைவராக்கப்படலாம் எனவும், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வருகிறது.
இன்று காலை மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கருணாநிதிக்கு சமாதிக்கு மரியாதை செலுத்திய அழகிரி, தனது ஆதங்கத்தை கொட்டவே இங்கு வந்தேன் என தெரிவித்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு, கட்சியில் தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து பல பரபரப்பான கருத்துகளை அழகிரி கூறி வருகிறார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “ஒரு சூரியன் மறைந்தபின் சில நட்சத்திரங்கள் தோன்ற முயற்சி செய்கின்றன. அதில் எத்தனை ஓளிரப்போகின்றன என பார்க்க வேண்டும். அழகிரி செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல், கட்சியில் பிளவு ஏற்படும்போது அதை திறமையாக கையாண்ட தலைவர்கள் இருக்கிறார்கள். திமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என அவர் தெரிவித்தார்.