நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன், ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்களில் கண்ணுக்கு தெரியாத நோய்க்கிருமிகள் இருக்கும் என்றும், அவற்றை அகற்றுவதற்கு நவீன இயந்திரம் ஒன்றை தமிழக இளைஞர்கள் கண்டுபிடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த ராம்நாத் மற்றும் லக்ஷ்மண்காந்த் என்ற இரண்டு இளைஞர்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளை அழிப்பதற்கான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
"ஷீல்ட்-எக்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் ஒரு அறையை போல் கொண்டது. இதில் சில நிமிடங்கள் நம்முடைய பொருட்களை வைத்தால், அவை சுத்தமாகவும் கிருமி இல்லாமலும் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இயந்திரத்தில், UV ஸ்டெர்லைசேஷன் (புற ஊதா ஒளி பயன்படுத்தப்பட்டு), வெப்ப சுத்திகரிப்பு (Thermal Disinfection), புகைமூட்டம் (Fogging Treatment) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ரசாயன கலவையை உருவாக்கி, புகையை உறிஞ்சுதல் (Fume Extraction) என்ற அம்சமும் பயன்படுத்தப்படுகிறது. அதன் பின் கடைசியாக சூடான உலர்ந்த காற்று கிருமி நீக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் நீக்கப்படும் என்றும், இதனால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த இயந்திரங்களை கல்வி நிலையங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கலாம் என்றும், நாம் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்க இந்த இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.