Publish Date: Mon, 25 Nov 2024 (12:55 IST)
Updated Date: Mon, 25 Nov 2024 (12:57 IST)
தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் சட்டசபை கூடும் தேதியை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கடந்த பிப்ரவரி மாதம் கூடிய நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும், அதற்கு நான்கு நாள் விவாதம் நடைபெற்றது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் உடனே நடைபெறாமல், பாராளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தும் வகையில், கடந்த ஜூன் மாதம் சட்டசபை கூடியது.
இந்த நிலையில், மீண்டும் டிசம்பர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்தார்.
டிசம்பர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூடும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தைக் கூட்டி எத்தனை நாட்கள் சட்டசபை நடைபெறும் என்பது குறித்த முடிவை விரைவில் எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபை நடத்தும் நாட்கள் குறித்து, அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் குழு ஆய்வு கூட்டம் முடிவு செய்யும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.