ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி நேரக் கட்டுப்பாட்டை விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பில் விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு அளித்த தீர்ப்பில் தமிழக
அரசின் விதிமுறைகள் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் விளையாட்டில் பங்கெடுக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடும்போது அரை மணி நேரத்திற்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு தான் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.