இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு எப்போதும் துணையாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த இந்தியா, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலுக்கு ராகுல் காந்தி உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் உறுதுணையாக இருக்கும். நாட்டிற்காகவும் ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்றும் உறுதியாக நிற்கும். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முழு ஆதரவு" என தெரிவித்துள்ளார்.