Publish Date: Fri, 20 Dec 2024 (14:07 IST)
Updated Date: Fri, 20 Dec 2024 (14:10 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபை கூட்டம் இரண்டு நாட்கள் மட்டும் நடந்த நிலையில், மீண்டும் ஜனவரி 6ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூடும் என்றும், அன்றைய தினம் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆளுநர் உரை நிகழ்த்த இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறினார். சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். ஒருவேளை தீர்மானம் கொண்டு வந்தால், அதைப் பற்றிய விவாதத்தை நிறைவேற்ற சட்டசபை தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த முறை கவர்னர் உரையில் நாங்கள் முரண்பாடு செய்யவில்லை. இந்த முறை கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
குறைவான நாட்கள் சட்டமன்றம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், சட்டசபை குறைவான நாட்கள் நடந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்த குறையும் இல்லை என்றும் அவர் கூறினார்.