Publish Date: Fri, 08 Dec 2017 (17:13 IST)
Updated Date: Fri, 08 Dec 2017 (17:16 IST)
அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் தரப்பு நடிகர் சசிகுமாரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தாரை தப்பட்டை படத்தை தயாரித்த போது சசிகுமார் தரப்பு அன்பு செழியனிடம் ரூ.18 கோடி வாங்கியுள்ளது. அதற்காக இதுவரை வட்டியும் கட்டி வந்துள்ளனர். ஆனால், அசலை திருப்பித்தரக்கூறி அன்பு தரப்பு நெருக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, சசிகுமார் நடித்த கொடிவீரன் படமும் வெளிவருவதில் அன்பு சிக்கலை ஏற்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக எழுந்த மன உளைச்சலில் சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டு மரணடைந்தார். மேலும், தன்னுடைய மரணத்திற்கு அன்பு செழியனே காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
எனவே, இது தொடர்பாக அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் சசிகுமார் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அன்பு செழியனை தேடி வருகின்றனர். ஆனால், பல நாட்கள் ஆகியும் அவர் இன்னும் பிடிபடவில்லை.
இந்நிலையில், தற்போது கொடிவீரன் படம் வெளியாகி விட்டது. அதற்கு அன்பு செழியனே திரை மறைவில் உதவியதாக கூறப்படுகிறது. மேலும், அசல் ரூ.18 கோடியை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும் என அன்பு தரப்பு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மொத்தக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சசிகுமார் தரப்பு வலியுறுத்தி வருவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
எப்படி பார்த்தாலும் விரைவில் இந்த பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் தனது புகாரை சசிகுமார் வாபஸ் வாங்குவார். அதன் மூலம், அன்பு செழியன் மீண்டும் தலைகாட்டுவார் எனக் கூறப்படுகிறது.