Publish Date: Fri, 15 May 2020 (13:27 IST)
Updated Date: Fri, 15 May 2020 (13:29 IST)
மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட் உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவில் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், டாஸ்மாக் வருமானத்துக்கு பதிலாக மாற்று வருமானத்திற்கு வழி தேட நான்கைந்து ஆண்டுகள் ஆகும் என்றும் , டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி உள்பட அனைத்து நிபந்தனைகளும் கடைபிடிக்க தயாராக இருப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது
இந்த வழக்கின் விசாரணை நேற்றும், இன்றும் நடைபெற்ற நிலையில் தற்போது அதிரடி உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் டாஸ்மாக் குறித்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகளை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
webdunia
Publish Date: Fri, 15 May 2020 (13:27 IST)
Updated Date: Fri, 15 May 2020 (13:29 IST)