Publish Date: Thu, 22 Jan 2026 (14:34 IST)
Updated Date: Thu, 22 Jan 2026 (14:36 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அவரைக் காண பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரம் மக்கள் கூடினார்கள். எதிர்பார்த்ததைவிட கூட்டம் அங்கு கூடி விட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதோடு விஜய் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து பிரச்சார வேனுக்குள் பேசிக்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர்.
மயக்கமடைந்தவர்களில் 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இரண்டு முறை டெல்லி சென்று சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். வருகிற பிப்ரவரி முதல் அல்லது 2வது வாரத்தில் சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் எனத்தெரிகிறது.
இந்நிலையில்தான், கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முதன் முறையாக கருத்து தெரிவித்திருக்கிறது. கரூரில் நடந்த துயர சம்பவம் துரதிஷ்டமானது. இதில் தலையிட்டு நாங்கள் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியிருக்கிறார். நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை உருவாக்க கோரும் வழக்கில்தான் உச்சநீதிமன்ற நீதிபதி இந்த கருத்தை சொல்லியிருக்கிறார்.