Publish Date: Tue, 31 Dec 2019 (09:15 IST)
Updated Date: Tue, 31 Dec 2019 (09:18 IST)
கள்ளக்காதல் விவகாரத்தால் சினிமா துணை நடிகரை பெண் நடிகை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த ரவி என்பவர் சில வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்த அவருக்கு தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தேவியும் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். தேவிக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ரவிக்கு, தேவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலித்து வந்துள்ளனர். சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் தேவி தனது வீட்டிலேயே தையல் தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் ரவி உடனான தொடர்பையும் அவர் துண்டித்துள்ளார். கடந்த சில வருடங்களாக தொடர்பில் இல்லாத ரவி சில மாதங்களுக்கு முன்பிருந்தே தேவி வீட்டிற்கு வருவது, போன் செய்து தொந்தரவு தருவதுமாக இருந்துள்ளார்.
ரவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க போன் நம்பரை மாற்றிவிட்டு வேறு ஏரியாவில் குடியேறியுள்ளார் தேவி. தேவியை கண்டுபிடிக்க முடியாத ஆத்திரத்தில் ரவி, தேவியின் தங்கை வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. தங்கை அளித்த தகவலால் தனது கணவருடன் தங்கை வீட்டிற்கு வந்த தேவி, அனைவர் முன்னிலையிலும் தன்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம் என பேசியுள்ளார். ஆனால் ரவி அதற்கு மறுத்ததாகவும், மேலும் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தேவி, அவரது தங்கை மற்றும் அவர்களது கணவர்கள் ஆகிய நால்வரும் சேர்ந்து ரவியை சுத்தியலால் அடித்தும், துணியால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்த காவல் துறையினர் நால்வரையும் கைது செய்துள்ளனர்.