Publish Date: Thu, 23 Aug 2018 (08:41 IST)
Updated Date: Thu, 23 Aug 2018 (08:42 IST)
அழகிரியின் அரசியல் நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கிண்டலடித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தன்னை திமுகவில் இணைப்பார்கள் என அழகிரி எதிர்பார்த்தார். ஆனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். இன்று திமுக பொதுக்குழுவும் கூடுகிறது.
எனவே, தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ள அழகிரி, செப்டம்பர் 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் பகுதியிலிருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பேரணியை நடத்துகிறார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘என்னை திமுகவில் இணைத்து கொள்வது போல் தெரியவில்லை. என் குமுறல்களை நேரம் வரும்போது தெரிவிப்பேன். நான் நடத்தும் பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்” என தெரிவித்தார்.
1
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி “திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதியாகி விட்டது. அழகிரியால் இட்லி கடை மட்டுமே வைக்க முடியும். தமிழக பாஜக தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவிட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும்” என அவர் பேட்டியளித்தார்.