Publish Date: Mon, 16 Jul 2018 (11:58 IST)
Updated Date: Mon, 16 Jul 2018 (12:02 IST)
ஸ்டெர்லைட் நிர்வாகம் அதன் ஊழியர்களை இன்று ஆலைக்கு வரச் சொல்லியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி 13 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஸ்டெர்ட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் சார்ப்பில் ஜூலை 3 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு வேதாந்தா குழுமத்தின் மனுவுக்கு வரும் 18ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆலை மூடப்பட்டு இருக்கும் வேளையில் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது தூத்துக்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.