Publish Date: Sat, 24 Feb 2018 (11:00 IST)
Updated Date: Sat, 24 Feb 2018 (11:03 IST)
திமுகவின் முக்கிய பதவியான பொருளாளர் பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.ராசாவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக நிர்வாகிகள் மட்டத்தில் பல சிக்கல்களும், புகார்களும் இருப்பதால், கடந்த சில நாட்களாகவே மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். மேலும், திமுகவில் இரு பதவியில் வகிப்பவர்கள் தாங்களாக முன் வந்து ஒரு பதவியை விட்டுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன் பின் மார்ச் 31ம் தேதிக்குள் அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என திமுக தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கும் ஸ்டாலினிடம் செயல் தலைவர் மற்றும் பொருளாலர் என இரு பதவிகள் இருக்கிறது. எனவே, பொருளாலர் பதவியை விட்டு விடுவது என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.
அதேபோல், 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் ஆர்.ராசாவுக்கு அந்த பதவியை வழங்க ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.