Publish Date: Fri, 22 Feb 2019 (14:06 IST)
Updated Date: Fri, 22 Feb 2019 (14:14 IST)
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்கு சந்தித்தார். இதில் கண்டிப்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இருக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கலைஞரின் மறைவிற்கு விஜயகாந்தால் வர முடியவில்லை. அப்போது அவர் வெளியிட்ட விடியோவில், கலைஞர் இறந்தது தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என சொல்லி கதறி அழுதார். அதை மறக்க முடியாது. கலைஞர் மீது அளவுக்கடந்த அன்பை கொண்டவர். என்னை எப்பொழுது அண்ணன் அண்ணன் என கூப்பிடுவார்.
சிகிச்சைக்காக சென்று வந்த அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன். அவர் பூரண குணமடைந்து நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும். இந்த சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை என கூறினார்.
பின்னர் செய்தியாளர் ஒருவர் தேமுதிகவை ஏற்பீர்களா? என ஸ்டாலினிடம் கேட்டதற்கு உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள் என கூறினார். இதை வைத்து பார்க்கும்போது தேமுதிக திமுக பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக தான் தெரிகிறது. அரசியலில் எப்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம்...