Publish Date: Fri, 12 Feb 2021 (11:46 IST)
Updated Date: Fri, 12 Feb 2021 (11:50 IST)
சென்னையில் புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீக்கி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் சென்னை புறநகர் மாணவர்கள் போக்குவரத்திற்கு பெரும்பாலும் மின்சார ரயில்களையே நம்பி உள்ளனர். இந்நிலையில் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் கூட்ட நெரிசல் சமயங்களில் அரசு ஊழியர்கள், மாணவிகள், பெண்கள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலை 7.30 முதல் 9.30 வரையிலும், மாலை 4.30 முதல் 8 மணி வரை மின்சார ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் பேருந்துகள் வழியாக உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் செல்ல முடியவில்லை என மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்களது புகாரை ஏற்றுக்கொண்டுள்ள தெற்கு ரயில்வே மாணவர்களுக்கான நேரக்கட்டுப்பாட்டை ரத்து செய்துள்ளது..
இந்த கட்டுப்பாடு தளர்வு மாணவர்களுக்கு மட்டுமே என தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி அடையாள அட்டையை காட்டி டிக்கெட் பெற்றுக் கொள்லலாம் என தெரிவித்துள்ளது.