சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவரின் நகையை திருடியதாக அஜித்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, அஜித்குமார் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் மீது திருட்டு குற்றம்சாட்டிய நிகிதா என்ற பெண் மீது, ஏற்கெனவே பல மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக நிகிதா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2010ஆம் ஆண்டு துணை முதல்வரின் உதவியாளரை தனக்கு தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளதாகவும், பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது அவர்களை மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அஜித் குமார் மரணத்திற்கு ஒரு காரணமாகக் கூறப்படும் நிகிதா மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவருடைய பழைய மோசடி வழக்குகள் மீண்டும் தீவிரமாக விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அஜித் குமார் மரண வழக்கில் மேலும் பல புதிய கோணங்களை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.