Publish Date: Thu, 28 Jun 2018 (16:22 IST)
Updated Date: Thu, 28 Jun 2018 (16:26 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். அதன் பின் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சத்குரு ஜக்கிவாசுதேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் “ காப்பர் உற்பத்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்தியாவில் அதன் பயன் அதிகம் என மட்டும் தெரியும். நாம் அதை தயாரிக்கவில்லை எனில், சீனாவிடமிருந்து அதை வாங்க வேண்டியிருக்கும். சுற்றுச்சூழல் விதிமீறல்களை சட்ட ரீதியாக அணுக வேண்டும். பெரும் வியாபாரங்களை முடக்குவது பொருளாதார தற்கொலை” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “முதல்வர் அலுவகம் வெட்ககரமானது. யோகாவை தவிர பிரதமர் வேறு எதையும் பேசமாட்டார். காப்பரின் (செம்பு) பயன்பாடுகள் பற்றி பேச இது சரியான நேரமில்லை சத்குரு. போலீசாரால் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களை சுடுவது கொலை. அதை பற்றி பேசுங்கள் . இப்படிக்கு சமூக விரோதிகள் என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கம் போல் பாஜக ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக, மோசமான கருத்துகளை தெரிவித்து வந்தாலும், சித்தார்த்தின் இந்த தைரியமான கருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.