சென்னை அருகே ஒரு இளைஞர் தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சி செய்ததாகவும், அப்பெண் சுதாரித்து செயல்பட்டதால் தப்பித்ததாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ஷாகின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஷாகினும் அந்த பெண்ணும் கடந்த ஒரு வருடமாகப் பழகி வந்ததாகவும், அடிக்கடி பப்புகளுக்கு சென்று மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அறையெடுத்து தங்கியிருந்தனர். அப்போது, ஷாகின் திடீரென தனது நண்பர்களுக்கு வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, தானும் தனது கேர்ள் பிரண்டும் நெருக்கமாக இருப்பதை வீடியோவில் காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், இது கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கான முயற்சி என சந்தேகித்து, உடனடியாக குளியலறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
அங்கிருந்து அவர் தனது மொபைல் போன் மூலம் தோழிகளுக்கும், காவல்துறைக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினார். இதனை அடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளம் பெண்ணை மீட்டனர். தற்போது ஷாகினிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.