Publish Date: Wed, 07 Feb 2018 (16:15 IST)
Updated Date: Wed, 07 Feb 2018 (16:20 IST)
குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் இரண்டு சமையல்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
குமரி மாவட்டம் குழித்துறையில் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இரண்டு சமையல்காரர்கள் உள்ளனர். இந்த விடுதியின் காப்பாளரே தக்கலையில் உள்ள விடுதிக்கும் காப்பாளராக உள்ளதால் முழுநேரமும் சமையல்காரர்களே மாணவர்களுடன் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவனை சமையல்காரர் ஒருவர் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வழிந்தோடிய நிலையிலும் அவர்கள் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.
சகமாணவர்கள் மூலம் இது தெரியவர ஆசிரியர்கள் புகார் அளித்ததின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது விடுதியில் இருந்த மாணவர்கள் அவர்கள் தங்களை தாக்குவது மட்டுமில்லாமல் ஓரினச்சேர்க்கை பாலியல் தொல்லை தருவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆதிதிராவிடர் துறை துணை ஆட்சியர், குழந்தைப் பாதுகாப்பு துறை அதிகாரி ஆகியோர் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். மாயமான சமையல்காரர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.