Publish Date: Tue, 10 Apr 2018 (16:59 IST)
Updated Date: Tue, 10 Apr 2018 (17:07 IST)
கரூர் அருகே உள்ள தளவாப்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு காவிரி ஆற்று மாரியம்மன் கோயிலின் தீ மிதி திருவிழாவில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், தளவாப்பாளையம் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஆற்று மாரியம்மன் கோயிலின் திருவிழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று (10-04-18) மாலை முதல் இரவு வரை பூக்குழி எனப்படும், தீ மிதி திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு, தீ மிதித்து தனது வேண்டுதல்களை நிறைவேற்றினார். மேலும், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். இந்த தீ மிதி திருவிழாவினை காண, கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அருள் பெற்றனர்.
மேலும், முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி முதலே, மெளன விரதம் மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வரும் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி, தற்போது, கடந்த சில தினங்களாகவே, விரதம் இருந்து இந்த தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்துள்ளார்.
சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்