Publish Date: Wed, 21 Jan 2026 (11:01 IST)
Updated Date: Wed, 21 Jan 2026 (11:03 IST)
எம்ஜிஆர் அதிமுகவை துவங்கிய காலத்திலிருந்து அந்த கட்சியில் இருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பலமுறை எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக பதவியில் இருந்திருக்கிறார். மேலும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு வாக்குகளை பெற்று தந்து அங்கு அந்த கட்சி வெற்றிபெற காரணமாக இருந்தவர் செங்கோட்டையன். ஆனால் அதிமுகவில் எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் அவரை கட்சியிலிருந்து தூக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
ஏனெனில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசி வந்தார் செங்கோட்டையன் அவர்களை அதிமுகவில் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், அதிமுகவிலிருந்து தூக்கப்பட்டதால் செங்கோட்டையன் திமுகவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
. மேலும் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்தி காட்டினார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையனை யாரும் மதிப்பதில்லை, அந்த கட்சியில் அவர் ஓரம் கட்டப்படுவதாக சமீபத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
செங்கோட்டையன் அதற்கு கண்டனமும், மறுப்பும் தெரிவித்திருக்கிறார். எங்கள் வாழ்வும் தமிழகத்தின் எதிர்காலமும் விஜய் தலைமையில் அமையப்போகிறது. அதற்காகத்தான் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் செங்கோட்டையன்.