Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை அதிபருக்கும் பிரதமருக்கும் இது தெரியாதோ? சீமான்!

இலங்கை அதிபருக்கும் பிரதமருக்கும் இது தெரியாதோ? சீமான்!
, வியாழன், 3 பிப்ரவரி 2022 (12:06 IST)
தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் நால்வரையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஈழத்தாயகத்தைச் சேர்ந்த முகமது கலீல், முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் ஆகிய நான்கு மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து மீன் பிடிக்கக் கிளம்பியவர்கள், படகின் இயந்திரம் பழுதானதால் உண்ண உணவின்றி, மூன்று வேளையும் பச்சை மீனை சாப்பிட்டும், கடல் நீரைக் குடித்தும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், 62 நாட்களுக்குப் பிறகு காற்றின் மூலம் படகு கரை ஒதுங்கியபோது சென்னை எண்ணூர் துறைமுகக் காவலர்களால் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
webdunia
இலங்கை இனவாத அரசு அப்பாவி தமிழக மீனவர்களைச் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தும் அதே கொடுங்கோன்மைச் செயலை, தமிழ்நாடு அரசும் செய்துவருவது சிறிதும் அறமற்றச் செயலாகும். அதிலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நால்வரும் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டது. ஆகவே, அவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
 
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்படும்போது கண்டும் காணாமல் இருக்கும் இந்திய ஆட்சியாளர்களைப் போலவே, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. தனது நாட்டின் குடிமக்களாகிய இசுலாமியத் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இலங்கை நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் அறிந்திருப்பார்களா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 
webdunia
எனவே இரு நாட்டின் கடல் எல்லை வரையறைகளாலும், அரச அதிகாரத்தின் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்படுவது இரு நிலங்களிலும் வாழும் ஏதுமறியா தமிழ் மீனவர்கள்தான் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.
 
ஆகவே, எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் வாடும் ஈழத்தமிழ் இசுலாமிய மீனவர்கள் நால்வரையும் விடுவித்து, நாடு திரும்பச் செய்து, அவர்களது குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழன், தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா? ஜெயகுமார் கேள்வி!