Publish Date: Thu, 25 Jul 2024 (15:25 IST)
Updated Date: Thu, 25 Jul 2024 (15:27 IST)
பள்ளி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தி பள்ளி மாணவர்களை காப்பாற்றிய பின் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தை மலையப்பன் என்பவர் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சாலையோரம் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய நிலையில் ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்தார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்ற பகுதியைச் சேர்ந்த மலையப்பன் கடந்த பல ஆண்டுகளாக பள்ளி வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மாணவ மாணவிகளை மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்வார் என்ற பெயர் அவருக்கு இருந்த நிலையில் இன்று அவர் வாகனம் ஓட்டும்போது திடீரென நெஞ்சுவலியால் அவஸ்தைப்பட்டாaர்.
ஆனால் நெஞ்சு வலியையும் பொறுத்துக் கொண்டு அவர் மிகவும் சிரமப்பட்டு பள்ளி வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அதன் பின்னர் ஸ்டேரிங் முன் சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற நிலையிலும் அவர் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி வாகனத்தை ஓரமாக நிறுத்தி உயிர் இழந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.