Publish Date: Fri, 08 Sep 2017 (17:05 IST)
Updated Date: Fri, 08 Sep 2017 (17:18 IST)
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வரும் நிலையில், போராட்டங்கள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஓராண்டு காலம் விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு கை விரித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் விலக்கு அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து மருத்துவராகும் தனது கனவு நிறைவேறாமல் போய்விட்டது என அனிதா என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார்.
இதையடுத்து அனிதா மரணத்துக்கும் நீதி கோரியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போரட்டம் நடத்த உச்ச் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க கூடாது என வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனி நபர்கள் என எவரும் எந்தப் போராட்டங்களையும் நடத்தக் கூடாது. போராட்டங்கள் நடத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதோடு நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.
இவ்வாறு நீதிமன்ற உத்தரவில் பிறப்பிக்கப்பட்டது.