தினகரனுக்கு கடிவாளம் போட ஜெய் ஆனந்தை களம் இறக்கும் சசிகலா!
தினகரனுக்கு கடிவாளம் போட ஜெய் ஆனந்தை களம் இறக்கும் சசிகலா!
Publish Date: Wed, 11 Oct 2017 (11:39 IST)
Updated Date: Wed, 11 Oct 2017 (11:50 IST)
தனது கணவர் நடராஜனுக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி 5 நாட்கள் அவசர பரோலில் வந்துள்ள சசிகலா சில அதிரடி திட்டங்களை வகுத்துள்ளதாகவும், அதில் தினகரனுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பரோலில் வந்துள்ள சசிகலா சென்னை தி நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு சசிகலா வந்ததில் இருந்து அவருடன் தங்கி இருக்கும் நபர்களில் ஒருவர் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்.
சசிகலா வந்ததில் இருந்தே தினகரன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தவாறே உள்ளது. இதனால் தினகரன் மீது சசிகலா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியில் ஜெய் ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது பரோலில் இருப்பதால் சிறை நிபந்தனையை மீறி இந்த அறிவிப்பை வெளியிட முடியாது என்பதால் சசிகலா மீண்டும் சிறைக்கு சென்ற பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தினகரன் துணைப் பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சியை பொறுத்தமட்டில் இனி ஜெய் ஆனந்த் தலையீடு இருக்குமாம். தினகரன் எந்த முடிவு எடுத்தாலும் ஜெய் ஆனந்தை கேட்டு முடிவெடுக்கும் வைகையில் இருக்குமாம் அவருக்கான முக்கியத்துவம். மேலும் ஜெயா டிவியிலும் ஜெய் ஆனந்துக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து எல்லாவற்றையும் கண்காணிக்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக பேசப்படுகிறது.