Publish Date: Wed, 15 May 2019 (09:08 IST)
Updated Date: Wed, 15 May 2019 (13:20 IST)
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக ஆட்சியைக் கலைக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவர இருக்கிறார் என அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். தமிழக அரசியல் சூழ்நிலைகளை அவ்வப்போது தினகரன் மற்றும் அமமுகவினர் அவரை சந்தித்து அவ்வபோது தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகியவற்றால் தமிழக அரசியல்களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. அமமுகவினர் திமுக வுடன் சேர்ந்தாவது அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என உறுதியாகக் கூறியுள்ளனர்.
இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அமமுக தலைவர் சசிகலா சிறையில் இருந்து பரோலில் வெளிவர நினைப்பதாகவும் அதற்கான வேலைகளை அமமுகவினர் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. இதுவரை 2 முறை பரோலில் சசிகலா வெளியே வந்திருக்கிறார். கடைசியாக வெளியே வந்த போது விடுமுறைக்கு முன்னதாகவே மீண்டும் சிறைக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.