Publish Date: Thu, 12 Oct 2017 (09:18 IST)
Updated Date: Thu, 12 Oct 2017 (09:20 IST)
5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா இன்று காலை பெங்களூர் சிறைக்கு புறப்பட்டார்.
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் அளித்து கடந்த 6ம் தேதி பெங்களூர் சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து 6ம் தேதி மாலை 3 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
காரின் மூலமாகவே சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள அவரது உறவினர் இளவரசியின் வீட்டில் கடந்த 5 நாட்கள் தங்கியிருந்தார். அங்கிருந்தவாறே, அவரது கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு தினமும் சென்று வந்தார்.
வீடு மற்றும் மருத்துவமனை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றோடு அவரின் பரோல் முடிந்துவிட்டது. எனவே, இன்று காலை 9 மணியளவில் அவர் பெங்களூர் அக்ரஹார சிறைக்கு காரில் புறப்பட்டார்.