Publish Date: Wed, 28 Mar 2018 (11:52 IST)
Updated Date: Wed, 28 Mar 2018 (11:56 IST)
முதல் கணவரை விவாகரத்து செய்த பின்பே வழக்கறிஞர் ராமசாமியை 2வதாக திருமணம் செய்து கொண்டேன் என அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா அவரின் வழக்கறிஞர் ராமசாமியை 2வது திருமணம் செய்து கொண்டதுதான் கடந்த சில நாட்களாக இனையத்தில் செய்தியாக இருந்தது. அந்நிலையில், ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலா புஷ்பாவின் திருமணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், டெல்லியில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ராமசாமி ‘ஒரு விபத்தில் எனது மனைவி மற்றும் மகனை பறிகொடுத்தேன். நானும், எனது மகளும் மட்டுமே தப்பினோம். எனவே, என் மகளை பார்த்துக்கொள்ள சத்யபிரியாவை திருமணம் செய்தேன். ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததை என்னிடம் மறைத்தது பின்புதான் தெரியவந்தது. மேலும், என் மகளை அவர் கொடுமைப்படுத்தினார். அதோடு, அவரின் சகோதரர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது டெல்லியில் புகாரும் அளித்துள்ளேன். தற்போது மகளின் எதிர்காலத்திற்காகவே சசிகலா புஷ்பாவை திருமணம் செய்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.
அதேபோல், சசிகலா புஷ்பா அளித்த விளக்கத்தில் “எனது முதல் கணவரை விவாகரத்து செய்த பின்புதான், ராமசாமியை திருமணம் செய்துள்ளேன். அவரது பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு தெரியும். சத்யப்பிரியா குழந்தையோடு நின்று கொண்டு அழுததை தொலைக்காட்சியில் பார்த்தது கஷ்டமாக இருந்தது. அந்த குழந்தையை என்னிடம் வாங்கி கொடுங்கள். நான் வளர்த்துக்கொள்கிறேன் என ராமசாமியிடம் கூறினேன். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. சத்யபிரியாவிற்கு பின்னால் அரசியல் இருக்கிறது” என அவர் கூறினார்.