Publish Date: Sun, 04 Sep 2022 (15:29 IST)
Updated Date: Sun, 04 Sep 2022 (15:31 IST)
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த சில காலங்களாக அதிகமாக நடந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் சரத்குமார் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு வந்த சரத்குமாரிடம் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது பேசிய அவர் “ஆன்லைன் ரம்மியை தடுக்க அரசு என்ன முயற்சி எடுக்கிறது என முதலில் கேளுங்கள். பிறகு சரத்குமார் விளம்பரத்தில் நடித்தது குறித்து கேட்கலாம். ஆன்லைன் சூதாட்டம் மக்களை பாதிக்கும் என்பதை முன்பிருந்தே கூறி வருகிறோம்.
ரம்மி மட்டும் ஆன்லைன் சூதாட்டம் அல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை வைத்தும் சூதாட்ட செயலிகள் உள்ளது. அரசு எதையுமே தடுக்காமல் இருக்கும்போது சரத்குமார்தான் மக்களை கெடுக்கிறார் என்று எப்படி சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.