Publish Date: Thu, 07 Mar 2024 (16:46 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (16:47 IST)
ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் 80 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொண்டு அந்த டிக்கெட் மூலம் நாள் முழுவதும் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ரூ.80 டிக்கெட் வாங்கினால் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, சீதா தீர்த்தம், லெட்சுமண தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னி தீர்த்தம்,கலாம் இல்லம், ரயில் நிலையம்,கலாம் நினைவிடம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம். இந்தப் பயணச்சீட்டை பயன்படுத்தி எந்த நிறுத்ததிலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம்.
இந்தச் சிறப்புப் பேருந்துகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வரவேற்பை பொருத்து தினமும் இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.