ரயில் பெட்டிகளில் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பதால் ஏற்படும் விபத்துகளை குறைக்க அபராதம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல ஊர்களுக்கும் மக்கள் பயணிக்க விலை குறைவான போக்குவரத்து சேவையாக ரயில்கள் இருந்து வருகின்றன. ஆனால் இளைஞர்கள் பலர் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வதை சாகசமாக கருதி அபாயகரமான வேலைகளை செய்கின்றனர். உள்ளூர் மின்சார ரயில்கள் தொடங்கி விரைவு ரயில்கள் வரை இதுபோன்ற அபாய செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள ரயில்வே அதிகாரிகள், ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து செல்வது, தொங்கியபடி சாகசங்கள் செய்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 156ன் படி குற்றமாகும். இந்த செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். மேலும் ரயில்களில் நடைபெறும் குற்றச்செயல்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K