Publish Date: Mon, 25 Nov 2024 (12:38 IST)
Updated Date: Mon, 25 Nov 2024 (12:41 IST)
இன்று அல்லது நாளைக்குள் டெல்டா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் இன்று, அதாவது நவம்பர் 25ஆம் தேதி இரவில் தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் தீவிரமாக கனமழை பெய்யும். எனவே அந்த பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும்.
எனவே, டெல்டா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொருத்தவரை, நவம்பர் 27ஆம் தேதி வரை மழை பெய்யும். மேலும், இப்போதைய சூழ்நிலையில் காற்றழுத்தம் வலுப்பெறும் நிலையில், வட கடலோர பகுதிகளில் அடர் மேகங்கள் மையம் கொள்ளும் பட்சத்தில், நவம்பர் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய நான்கு நாட்களில் சென்னையில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொருத்தவரை, நீர் அதிகமாக தேவை உள்ளது. இந்த மழை அந்த நீர் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.