தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நீலகிரிக்கு மீண்டும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை தொடரும். அத்துடன், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதிகளிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.