Publish Date: Tue, 21 May 2019 (12:49 IST)
Updated Date: Tue, 21 May 2019 (12:54 IST)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ள தோப்பு வெங்கடாசலம் திடீரென கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்து மட்டுமின்றி விரைவில் கட்சியில் இருந்தும் விலகுவார் என்று கூறப்பட்டது.
தோப்பு வெங்கடாச்சலத்திற்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் தரப்பாடமல் இருந்ததால் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட அமைச்சருடனான மோதலால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அரவக்குறிச்சித் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார். அதே தொகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணனும் நியமிக்கப்பட்டிருந்ததால், அங்கு பணியாற்றாமல் சூலூர் தொகுதியில் சென்று பணியாற்றி வந்தார் வெங்கடாச்சலம்.
மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தனுக்காக தானும் அமைச்சர் கருப்பணனும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தும்கூட, கே.சி.கருப்பணன் சரியாகப் பணியாற்றவில்லையெனக் குற்றம்சாட்டினார்.
எனவே, இவர் மீதுள்ள அதிருதியின் காரணமாக தனது பதவியை தோப்பு வெங்கடாச்சலம் ராஜினாமா செய்திருக்க கூடும் என தெரிகிறது.