Publish Date: Fri, 25 May 2018 (12:00 IST)
Updated Date: Fri, 25 May 2018 (12:03 IST)
தலைமைசெயலகத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.கஸ்டாலின், திமுக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்ற போது, அதை முதல்வர் தவிர்த்ததால்தான் பிரச்சனையே உருவானது என செய்திகள் வெளிவந்துள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஸ்டாலினும், திமுக எம்.எல்.ஏக்களும் சென்ற போது, வாய்ப்பு வழங்கப்படாததால் அவரின் அறைக்கு முன்பே ஸ்டாலின், எம்.எல்.ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அதன் பின் கீழறங்கி சாலை மறியலில் ஈடுபட்டார். அதனால், ஸ்டாலினும், மற்ற எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் என்ன நடந்தது என்கிற தகவல் வெளியே கசிந்துள்ளது.
தூத்துக்குடி சென்ற ஸ்டாலின் அவரின் மக்கள் கூறிய புகார்களை தனி கோப்பாக தயாரித்து முதல்வர் பழனிச்சாமியிடம் கொடுக்கவே திட்டமிட்டிருந்தார். அதற்காக எம்.எல்.ஏக்களை அழைத்துக்கொண்டு அவர் மேலிருக்கும் முதல்வர் அறை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, ஏராளமான திமுக எம்.எல்.ஏக்களோடு, ஸ்டாலின் மேலேறி வருவதை அறிந்த முதல்வர், அவர்கள சந்திப்பதை தவிர்ப்பதற்காக தனது அறையை மூட சொன்னாராம். இதனால், ஸ்டாலின் வெளியே காத்திருக்க வேண்டியதாயிற்று. உள்ளே செல்லவும் காவலர்கள் அனுமதிக்கவில்லை.
இந்த கோபத்தில்தான் அந்த இடத்திலேயே தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின், அதன் பின் கீழே இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டார் என்கிற செய்தி வெளியே கசிந்துள்ளது.
ஆனால், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எடப்பாடி “ ஸ்டாலின் கூறுவது பொய். நான் ஆய்வு கூட்டத்தில் இருந்தேன். வேண்டுமென்றே அவர் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்” எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.