Publish Date: Wed, 03 Apr 2024 (09:06 IST)
Updated Date: Wed, 03 Apr 2024 (09:08 IST)
ஓபிஎஸ் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக ராஜ கண்ணப்பன் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என்று மேல் இடத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக நவாஸ் கனி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சந்திரபிரபா மற்றும் அதிமுக வேட்பாளராக ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
இந்த தொகுதியில் ஓபிஎஸ் மற்றும் ஜெயபெருமாள் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஓபிஎஸ் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக அதிமுக தனது படைகளை இறக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தும் திமுக பிரச்சாரத்தில் மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜகண்ணப்பன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த உயர்கல்வி துறை இலாகா பறிக்கப்பட்டது மற்றும் மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் பெயர் அளவுக்கு வேட்பாளர் உடன் ஒரு சில பகுதிகளில் மட்டும் வலம் வந்து கொண்டு இருப்பதாகவும் அவர் தீவிரமாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
திமுக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமநாதபுரம் தொகுதி கைமீறி போகும் என்றும் உள்ளூர் திமுக தொண்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.