Publish Date: Sat, 25 May 2019 (12:31 IST)
Updated Date: Sat, 25 May 2019 (12:32 IST)
தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற்றது ஏன் என்ற கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் சொல்லாமல் நழுவியுள்ளார்.
17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெறாமலேயே பாஜக் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது . காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, பாஜக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பியபோது அவர் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுள்ளார். பாமகவின் முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார் ராமதாஸ். அப்போது மக்கள் மோடிக்கு ’வரலாறு காணாத அளவுக்கு வெற்றியை அளித்துள்ளனர் அவருக்கு வாழ்த்துகள்.’ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.