Publish Date: Fri, 22 Apr 2022 (12:10 IST)
Updated Date: Fri, 22 Apr 2022 (12:13 IST)
தமிழக அரசு தனியாருடன் இணைந்து ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு கனவாக உள்ள நிலையில் தனியாருடன் இணைந்து வீடுகள் கட்டி அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ”ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீடு கட்டி குறைந்த விலைக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால் தனியாருடன் இணைந்து வீடு கட்டினால் அதன் விலை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும்.
எனவே தனியாருடன் இணைந்து வீடு கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு மாறாக வீட்டு வசதி வாரியமே தரமான வீடுகளை கட்டி மக்களுக்கு சகாயமான விலையில் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.