Publish Date: Wed, 05 Feb 2020 (11:43 IST)
Updated Date: Wed, 05 Feb 2020 (11:49 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தோடு முடித்துக்கொள்ளாமல் என்பிஆர் மற்றும் சிஏஏ குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவர் பேட்டியில் பேசியதாவது...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக எனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை. நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் நான் செய்யவில்லை.
இந்திய நாட்டிற்கு என்பிஆர் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அதேபோல சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள்.
இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்ம பூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்?
அப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன். அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என தூண்டிவிடுகிறார்கள். இதேபோல மாணவர்கள் போராடுவதற்கு முன் யோசித்து இறங்க வேண்டும்.
மாணவர்கள் போராட்டத்தின் போது தீர ஆராய்ந்து இறங்குங்கள். இல்லையென்றால் அவர்களை அரசியல் கட்சியினர் பயன்படுத்துக்கொள்வார்கள். யோசிக்காமல் முடிவெடுத்தால் மாணவர்களுக்கு தான் பிரச்சனை. போலீஸ்காரர்கள் எப்படி இருப்பார்கள் என யாருக்கும் தெரியாது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார்கள். எனவே, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும் என பேசியுள்ளார்.