Publish Date: Thu, 08 Mar 2018 (10:15 IST)
Updated Date: Thu, 08 Mar 2018 (10:18 IST)
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் அதிவலைகளை உண்டாக்கியது. ஸ்டாலின், வைகோ, சீமான், வீரமணி, தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ஹெச்.ராஜாவிற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர். ஆனால், அரசியலில் இறங்குவதாய் அறிவித்துள்ள ரஜினிகாந்த் கடந்த 2 நாட்களாக இந்த சம்பவம் பற்றி எந்த கருத்தும் கூறாமல் இருந்தார்.
இந்நிலையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் அருகே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் “பெரியார் சிலையை உடைப்போம் எனக் கூறியதும், சிலையை உடைத்ததும் காண்டுமிராண்டித்தனம். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் கருத்து தெரிவித்தார்.