Publish Date: Thu, 15 Oct 2020 (11:50 IST)
Updated Date: Thu, 15 Oct 2020 (11:52 IST)
ரஜினிகாந்த சற்றுமுன் டிவிட்டரில் பதிவிட்ட #அனுபவமே_பாடம் ஹேஷ்டேக்காக டிரெண்டாகி வருகிறது.
ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இப்போது அந்த மண்டபத்துக்கான கடந்த 6 மாதத்துக்கான சொத்து வரியைக் கட்ட சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக மண்டபம் திறக்கப்படாததால் சொத்து வரியை குறைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு செப்டம்பர் 23ம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவின் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் ‘மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பொறுமை காக்காமல் நீதிமன்றத்தை நாடியதற்காக ரஜினிக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாக ரஜினி தெரிவித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ள ரஜினிகாந்த் “ராகவேந்திரா மண்டப விவகாரத்தில் நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம்” என பதிவிட்டார்.
அவர் பதிவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் #அனுபவமே_பாடம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.