Publish Date: Thu, 15 Oct 2020 (10:33 IST)
Updated Date: Thu, 15 Oct 2020 (10:35 IST)
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக போராட்டம் நடத்தி வருவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தாமதமான முடிவு என தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா பல்கலைகழக தரத்தை உயர்த்துவது குறித்து தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தன்னிச்சையாக செயல்படும் சுரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று இன்று திமுக தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று திமுக போராட்டம் நடத்துகிறது. சுரப்பா நியமிக்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்பதை உணர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018-லேயே போராட்டம் நடத்திய கட்சி பா.ம.க” என்று கூறியுள்ளார்.
மேலும் “அப்போது அதை வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கி விட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே... அது வரை சரி தான்!” என தெரிவித்துள்ளார்.