Publish Date: Mon, 19 Aug 2019 (07:01 IST)
Updated Date: Mon, 19 Aug 2019 (07:01 IST)
அத்திவரதரை 48 நாட்கள் கழித்து மீண்டும் குளத்தில் வைக்கப்படும்போது மழை பெய்து குளம் மழை நீரால் நிரம்பும் என்பது ஐதீகமாக இருந்து வரும் நிலையில் அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்டவுடன் நல்ல மழை பெய்து மழை நீரால் அனந்தசரஸ் குளம் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு தரிசனம் தருவார். அந்த வகையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளித்தார். அத்திவரதரை தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒரு கோடி பேர் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் அத்திவரதர் ஐதீகப்படி 48 நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் ஐதீக முறைப்படி கடந்த 17ஆம் தேதி குளத்தில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் காஞ்சிபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அதன் மழை நீர் அனந்தசரஸ் குளத்தை நோக்கி வந்தது. இதனையடுத்து அனந்த்சரஸ் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. 48 நாட்கள் பொதுமக்களுக்கு தரிசனம் தந்தவுடன் மீண்டும் அத்திவரதர் குளத்தில் வைக்கப்படும்போது குளம், மழைநீரால் நிரம்பும் என்ற ஐதீகம் பலித்துவிட்டதை எண்ணி பக்தர்கள் பரவசம் ஆனார்கள்