Publish Date: Mon, 19 Aug 2019 (06:37 IST)
Updated Date: Mon, 19 Aug 2019 (06:41 IST)
நேற்றிரவு சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திடீரென பொதுமக்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவான்மியூர் மட்டுமின்றி ஈஞ்சம்பாக்கம், பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில் கடல் நீல் நிறமாக மாறியதாக பரவிய செய்தியே பொதுமக்கள் குவிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா கிராம், ஆகிய சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த பலர் இந்த பகுதிகளை நோக்கி நள்ளிரவிலும் திரண்டனர். குறிப்பாக திருவான்மியூர் கடற்கரையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் தங்களது மொபைல் மற்றும் கேமராக்களில் கடல் அலைகளை புகைப்படம் எடுத்து அதனை தங்கள் நண்பர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அனுப்பினர்.
இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் கூறியபோது, 'திடீரென கடல் நீலம் மற்றும் மஞ்சள் நிறமாக மாறுவது உலகின் பல இடங்களில் நடைபெறும் ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு இது புதியதாக தெரிகிறது. கடல் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் காரணமாக இம்மாதிரி நிறம் மாறும். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது' என்று கூறினார்.